துறைமுக அபிவிருத்தி மற்றும் விமானப் போக்குவரத்து துறையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்குமென இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) தெரிவித்துள்ளார்.
நேற்று காலை (28) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைச் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், தலை மன்னார் துறைமுகம் மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்திய முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகப் பகுதியில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு குறிப்பாக கப்பல் மற்றும் சிறிய படகுகளை நிர்மாணிப்பதற்கு இடவசதியை வழங்க முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.