சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் நுவரெலியா- கந்தப்பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கந்தப்பளை பார்க் தோட்டம்,கந்தப்பளை கிராமம்,ஆறாம் கட்டை புதுரோடு, மற்றும் கல்பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கந்தப்பளை பிரதேசத்தில் பார்க் தோட்டம் மற்றும் புதுரோடு பகுதியிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளமையால் விவசாய காணிகள், வீடுகள், மற்றும் பிரதான வீதிகளில் நீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
மேலும் நுவரெலியா- உடப்புசல்லாவை பிரதான வீதியில் கந்தப்பளை புதுரோடு எனும் இடத்தில் வெள்ள நீர் நிரம்பி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பஸ் மற்றும் லொறிகள் போன்ற பெரிய வாகனங்கள் மாத்திரம் பயணிக்கக்கூடியதாகவிருந்தது.
அதேநேரத்தில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் என சிறிய ரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றமையால் காரியாலயங்கள்,உட்பட அவசர தேவைகளுக்கு நுவரெலியாவை நோக்கி பயணிப்போர் அசௌகரியங்களை அனுபவித்தனர்.
வெள்ள அனர்த்தத்தினால் ஆறாம் கட்டை மற்றும் புதுரோடு பகுதியில் வெள்ள நீர் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் உட்புகுந்து பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
(ஆ.ரமேஷ்)