மக்கள் நலமே தன் பலம் எனக் கருதி மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்ட தேதிமுக நிறுவுனர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு பேரதிர்ச்சியையும், பெரும் வேதனையும் அளிக்கின்றது.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு ,
” சுகவீன முற்றிருந்த தேதிமுக தலைவர் கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார், மக்கள் சேவையை புத்தெழுச்சியுடன் ஆரம்பிப்பார் என்றல்லாவா எதிர்பார்த்து காத்திருந்தோம். அவரின் நலனுக்காக இறைவனை பிரார்த்தித்தோம். ஆனால் கால சக்கரம் அவரை தன்னிடம் அழைத்துக்கொண்டுள்ளது.
விஜயகாந்தை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் அவர் ஒரு புதிய வரலாறு. ஓரிரு வார்தைகளில் எடுத்துக்கூற முடியாது. மறைந்த எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் நட்பில் இருந்தவர். இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்தவர்.
தான் கால்வைத்த துறைகளில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவர். எளிமையையும், மக்கள் சேவையும்தான் அவரின் வலிமை. அவரின் இழப்பால் வாடும் மனைவி, பிள்ளைகள், கட்சி தொண்டர்கள், இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாறட்டும்.” – என்றுள்ளது.