யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இம்மாணவி மருந்து ஒவ்வாமையால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுவதால், இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மரணமடைந்த மாணவிக்கு எவ்வித ஒவ்வாமையும் இல்லையென்பதுடன், செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தொடர்பாக தமக்கு தெரிவிக்கப்படவில்லையெனவும் பொலிஸ் முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இம்மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே மரணமடைந்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இம்மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் விசேட நிருபர்