Tuesday, April 23, 2024
Home » மரக்கறி விலையுயர்வினால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு ஒரேவழி வீட்டுத் தோட்டச் செய்கை

மரக்கறி விலையுயர்வினால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு ஒரேவழி வீட்டுத் தோட்டச் செய்கை

வீட்டுப் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு

by Gayan Abeykoon
December 28, 2023 7:10 am 0 comment

ற்காலத்தில் மரக்கறிகளின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது. வீட்டுத் தோட்டத்தில் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும் போது விலைகள் குறையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே கவனிப்பாரற்றுக் கிடக்கின்ற தரிசு நிலங்களில் மரக்கறிப் பயிர்களைப் பயிரிடவேண்டும்.

மரக்கறிகளின் விலையேற்றத்துக்கு தீர்வாக வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை உதவுகிறது. உற்பத்தி அதிகரித்தால் விலையேற்றம் குறையும். எனவே பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதன் மூலம் மரக்கறிகளின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும்.

பண்டைய காலத்திலிருந்தே மக்கள் தமது வீடுகளுக்கு அருகே மரக்கறிகள், பழவகைகள், சரக்குப் பயிர்கள், வாசனை திரவியப் பயிர்கள், பூக்கள், பலகைகள் பெறக்கூடிய மரங்கள் என்பவற்றை செய்கை பண்ணி வந்துள்ளனர். இதன்மூலம் சூழலை சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருப்பதில் நம் முன்னோர் ஆர்வம் கொண்டிருந்தனர். வீடுகளுக்கு அருகேயுள்ள நிலத்தில் பயன்தரக்கூடிய தாவரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் செய்கை பண்ணுவதை வீட்டுத்தோட்டமாகக் கருத முடியும். இதற்கு குறைந்தளவு இடம் போதுமானதாகும்.

பயிர் செய்கைக்கு இடவசதி பற்றாக்குறையாக இருந்தால் மாற்று வழிகளைக் கையாளவேண்டும்.நகர்ப்புறத்திலுள்ள வீடுகளில், குடியிருப்புகளில் காணப்படும் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டதாகும். அவ்வாறான பிரச்சினை எதிர்கொள்ளப்பட்டால் பின்வரும் முறைகளில் பயிர் செய்கையை மேற்கொள்ளலாம்

சாடிப் பயிர்ச் செய்கை முறைகளைப் பயன்படுத்துதல், நிலைக்குத்துப் பயிர்ச்செய்கை முறையான பயிர்ச்செய்கைக் கோபுரம், பயிர்ச் செய்கைக் குடை, பயிர்ச்செய்கை இறாக்கை, பயிர்ச்செய்கை ஏணி, பயிர்ச் செய்கை கூம்பகம் போன்றவற்றை பயன்படுத்துதல்.

மதில்சுவர், கூரை போன்றவற்றை ஆதாரமாகப் பயன்படுத்தி பயிர்செய்யும் முறைகளைப் பயன்படுத்த முடியும்.

நிலம், நீர், சூரியஒளி போன்ற வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தக் கூடியதாக ஒழுங்கமைக்கப்பட்ட பரந்த உயிர்ப்பல்வகைமையுடைய சமநிலையான சூழற் தொகுதியே திட்டமிட்ட வீட்டுத்தோட்டம் எனப்படும். இந்த வீட்டுத்தோட்டத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தினால் வீட்டின் மரக்கறித் தேவையை பூர்த்தி செய்வதோடு வீட்டுக்கு ஒரு வருமானம் ஈட்டக் கூடியதாகவும் இருக்கும். மக்கள் தமக்கு அன்றாடம் தேவைப்படும் சுத்தமான புதிய மரக்கறி வகைகளை தாமாகவே உற்பத்தி செய்து கொள்வதே வீட்டுத் தோட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நாள்தோறும் நமது உணவில் முக்கிய பங்கு வகிக்கும் மரக்கறிகள் உணவுக்கு சுவையூட்டுவதோடு உடலுக்கு அவசியமான போசணைச் சத்துக்களான விட்டமின்கள், கனிப்பொருட்கள் உப்பு, நார்ப்பொருட்கள் என்பனவற்றை வழங்குகின்றன.

அதிகரித்துவரும் சனத்தொகையின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் தமது வருமானத்தின் பெரும் பகுதியை உணவுப் பொருட்களுக்கு செலவிட வேண்டியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கின்றது. எனவே மக்கள் தமது வாழ்விடங்களில் உள்ள இடவசதிக்கேற்ப மரக்கறிகள், பழங்கள் என்பவற்றை உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் வீட்டின் பொருளாதாரத்தை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும்.

இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முதலில் வீட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். அதற்குஅனைவரும் முதலில் வீட்டுத்தோட்டப் பயிர்செய்கையில் ஈடுபட வேண்டும். அனைவரும் சேர்ந்து வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்வது மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்குப் பயிற்சியையும் வீட்டுக்கு சுத்தமான சூழலையும் வழங்குகின்றது.

எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள இடப்பரப்பில் குடும்ப அங்கத்தவர்களுக்கு தினமும் தேவைப்படும் மரக்கறிகள், பழங்கள், கிழங்கு, மூலிகைப் பயிர்கள் போன்ற பயனுள்ள தாவரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் செய்கை பண்ணுதல் மற்றும் கோழி ஆடு மாடு போன்ற விலங்குகளை வளர்ப்பதையும் வீட்டுத்தோட்டமாக கருதமுடியும். கத்தரி, கண்டங்கத்தரி, கறிமிளகாய், தக்காளி, முருங்கை, பாகல், புடோல், பீர்க்கு, கெக்கரி, பூசணி, பயற்றை, சிறகவரை, அகத்தி, பொன்னாங்காணி, வல்லாரை, கங்குன், பசளி, பச்சை மிளகாய், முளைக்கீரை போன்றவற்றை செய்கை பண்ணலாம்.

பழவகைகளாக வாழை, கொய்யா, பப்பாசி, ஆனைக்கொய்யா, கொடித்தோடை, நெல்லி ரம்புட்டான். மா, தோடை. அன்னாசி போன்றவற்றை செய்கை பண்ண முடியும்.

அத்துடன் மரவள்ளி, கற்றாளை, சேம்பு, கொடிக்கிழங்கு மற்றும் உள்ளூர்க் கிழங்குவகைகள் செய்கை பண்ணுவது பலனைத் தரும்.

மருத்துவ மற்றும் வாசனைத் திரவியப் பயிர்களான இஞ்சி, மஞ்சள், மிளகு, கோப்பி, கறிவேப்பிலை, ரம்பை, கற்றாளை போன்றவற்றை நடலாம். பலா, ஈரப்பலா, தென்னை, வெற்றிலை என்பனவும் வருமானம் தரும் பயிர்களாகும்.

மேலும் மரக்கறிப்பயிர்கள் நன்கு சூரிய ஒளி விழக் கூடியதும், அதிகளவு ஈரலிப்புத்தன்மை காணப்படாத வளமான மண் காணப்படுமிடங்களிலும் பயிரிடப்பட வேண்டும்.

பழப்பயிர்கள் நன்கு சூரிய ஒளி விழும் இடங்களில் வீட்டிலிருந்து தூரத்தில் அண்மித்ததாக நடலாம்.

வேலிப்பயிர்களாக முருங்கை, கொடித்தோடை, பீர்க்கு என்பவற்றை நட வேண்டும்.

ஈரலிப்பான இடங்களில் கங்குன், கொஹிலை, நீர்முள்ளி நடலாம்.

நிழல் உள்ள இடங்களில் இஞ்சி, மஞ்சள், சேம்பு, வல்லாரை, பசளி போன்றவற்றை பயிரிடலாம்.

சில விதைகளை நேரடியாக பயிரிட வேண்டும். பயற்றை, போஞ்சி, சிறகவரை, பாகல், புடோல், பீர்க்கு, முள்ளங்கி, பூசணி, கரட், பசளி, முளைக்கீரை என்பவை அவையாகும்.

நாற்றுமேடை தயாரித்து நாற்றுக்களை நட வேண்டிய பயிர்கள் கத்தரி, மிளகாய், தக்காளி, கறிமிளகாய், கோவா, நோகோல், சலாதுக்கீரை என்பனவாகும்.

தண்டு துண்டங்கள் மூலம் பயிரிடக்கூடிய பயிர்கள் வற்றாளை, மரவள்ளி, கங்குன், பொன்னாங்காணி என்பனவாகும்.

எனவே இவ்வாறான பயிர்களை வீட்டுத்தோட்டத்தில் பயிர் செய்யும் போது வீட்டுப் பொருளாதாரம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்மாயில் ஹுஸைன்தீன் (Bed)

அம்பாறை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT