கொரோனா பாதிப்பு இந்தியாவில் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டுள்ள நிலையில், இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்றுமுன்தினம் மட்டும் 655 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாகக் கேரளாவில் மட்டும் 424 பேருக்கும், தமிழ்நாட்டில் 21 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் வைரஸ் பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இப்படி திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரிக்க ஒமிக்ேரான் ஜேஎன்.1 திரிபு காரணம் என்று கூறப்படுகிறது.
“ஏற்கனவே போட்டுக் கொண்ட கொரோனா தடுப்பூசிகளே நம்மை இதில் இருந்து பாதுகாக்கும். 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மட்டும் இப்போது கூடுதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி தேவையில்லை. அதேபோல முதியவர்களும், தொற்றாநோய் உள்ளவர்களும் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்” என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ேரான் துணை திரிபு ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்படுவது இது முதன் முறை இல்லை. ஏற்கனவே பல துணை திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 400 துணை திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜே.என்.1 கொரோனா வகையின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் இருமல் ஆகியவையாகும். சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல்வலிகள் இருக்கலாம், இவை பொதுவாக இரண்டு முதல் ஐந்து நாட்களில் குணமாகும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.