இலங்கைக்கும் நேபாளத்துக்குமிடையிலான வர்த்தகம், கல்வித்துறை, சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் நேபாள வெளிவிவகார அமைச்சருக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் காத்மண்டுவில் நடைபெற்றன.
நேபாள வெளிவிவகார அமைச்சர் என்.பி.சௌத் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையில் நேபாள-இலங்கை கூட்டு ஆணைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் (21) காத்மாண்டுவில் நிறைவடைந்தது. இதன்போதே இருவரும் பரஸ்பரம் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இலங்கை வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த புதன்கிழமை நேபாளத்தின் காத்மாண்டுவை சென்றடைந்தார்.
இரு தரப்பினரும் பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பின் புதிய காட்சிகளை திறப்பது தொடர்பான விடயங்களை பற்றி விவாதித்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாள தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் என்.பி.சௌத், வெளிவிவகார செயலாளர் சேவா லாம்சல், இலங்கைக்கான நேபாள தூதுவர் பாசுதேவ் மிஸ்ரா மற்றும் வர்த்தகம், உட்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் மூத்த அதிகாரிகள் இருந்தனர். அதேபோன்று, காத்மாண்டுவுக்கான இலங்கைத் தூதுவர் சுதர்சன பத்திரண மற்றும் அந்நாட்டின் மூத்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இலங்கைக் குழுவில் இருந்தனர்.
நேபாள வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துதல், விமான இணைப்பை அதிகரிப்பது, கலாசாரம், சுற்றுலா மற்றும் கல்வித்துறைகளில் பரிமாற்ற திட்டங்கள், சார்க் மற்றும் பிம்ஸ்டெக் செயல்முறைகள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்தும் காத்மாண்டு-கொழும்பு விமான இணைப்பின் செயல்பாடு ஊக்கமளிக்கிறது என்று கூறிய இரு தரப்பினரும், கொழும்புக்கும் லும்பினிக்கும் இடையிலான விமான சேவையின் சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர்.
இலங்கை சிறையில் உள்ள மூன்று நேபாள பிரஜைகளை இடமாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கருத்து பரிமாறிக் கொண்டனர்.