அமைச்சர் ரமேஷ் பத்திரன களஆய்வு
டெங்கு நுளம்பு உற்பத்தி இடங்களை அழிக்கும் நடவடிக்கைகளின் போது, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் செல்லமுடியாத இடங்களில், ட்ரோனர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். டெங்கு நுளம்பு முட்டையிட்டுள்ள பகுதிகளை Drone தொழில்நுட்பம் மூலம் அழிப்பதற்கு திரவங்களை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேல் மாகாணத்தில் கொழும்பு நகர எல்லைப்பகுதி, கல்கிசை, கடுவெல நகர எல்லை ஆகிய பகுதிகளில் பெருமளவு டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையினரின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகள் மூலம் அப்பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சாத்தியமானதாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் நடைமுறையிலிருந்தாலும் மக்களுக்கு தெளிவூட்டி அவர்களையும் தொடர்புபடுத்தி நடவடிக்கையை மேற்கொள்வது முக்கியமாகும்.
இது அனைவரும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய செயற்பாடு என்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்