Home » பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை, கொள்ளை சம்பவ சந்தேகநபர் கைது

பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை, கொள்ளை சம்பவ சந்தேகநபர் கைது

- மூதாட்டி கொலை தொடர்பில் கைதாகி தப்பிச் சென்ற நபர்

by Rizwan Segu Mohideen
December 21, 2023 2:26 pm 0 comment

– பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 09 ஆந் திகதி சனிக்கிழமை அதிகாலை குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய ஹட்டன் ஹிஜிராபுர பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய சி.எம். இப்ராஹிம் என்பவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டிருந்தது.

சந்தேகநபர் பள்ளிக்குள் வருவது உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் CCTV கெமராவில் பதிவாகியுள்ளதுடன், கைது செய்வதற்கான விசாரணை தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் 10 நாட்களின் பின்னர், 45 வயதானன சந்தேகநபரான முகைதீன் பாவா லாபீர் சம்மாந்துறை பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

குறித்த கைதான சந்தேகநபருக்கு சாய்ந்தமருது, பொத்துவில், ஹற்றன், பொலிஸ் நிலையங்களில் கொலை கொள்ளை தொடர்பாக முறைப்பாடுகள் உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர் கடந்த 2022 ஜனவரி 27ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் தப்பி சென்றிருந்தார். இவ்வாறு தப்பி சென்ற சந்தேகநபர் பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகிருந்தது.

இதனை அடுத்து சந்தேகநபர் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் 05 இற்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் மீது உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேகநபர், 10 நாட்களுக்கு முன்னர் ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரை கொலை செய்து, அங்கிருந்த உண்டியலை கொள்ளையடித்து தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜயலத்தின் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஷ்கர் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸ் குழுவினர், சந்தேகநபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT