பெளத்த மதம் உட்பட ஏனைய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டாரென்ற குற்றச்சாட்டின் பேரில், சிறைத்தண்டனை அனுபவித்துவரும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை ஜனவரி 04 இல், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேற்படி மனு மீதான விசாரணை, மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமிந்த விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார். மேற்படி நபர் தாக்கல்செய்துள்ள மனுமீதான விசாரணையை பிறிதொரு தினத்திற்கு பெற்றுத்தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, ஜெரோம்பெர்னாண்டோ சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஷ பிரேமரத்ன தெரிவிக்கையில், இந்த சந்தேகநபர் கிறிஸ்தவ மதத்தவர் என்பதால் அண்மையில் வரும் நத்தாரை கவனத்திற்கொண்டு மனுமீதான விசாரணையை இன்று (நேற்று) மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அந்த வேண்டுகோளுக்கு ஆட்சேபனை தெரிவித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி, மனுவை சாதாரண முறைமையின் கீழ் விசாரணைக்கு எடுத்துக்கொகள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சிறிபால என்றாலும் சோமபால என்றாலும் நடைமுறையிலுள்ள சட்டம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கும் ஒன்றாகவே இருக்கவேண்டும். அத்துடன் இந்த சந்தேகநபர் பல மாதங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்துவந்தவர். அந்தவகையில் சட்டத்தின் முன் சகலரும் சமம். எந்த விசேட சலுகைகளும் வழங்கப்படக்கூடாது என்றும் கேட்கப்பட்டது . அதற்கிணங்கவே மேற்படி மனுமீதான விசாரணையை ஜனவரி 04 ஆம் திகதி முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்