இந்திய பிரீமியர் லீக் தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரவின் விலையை உயர்த்தி மும்பை இந்தியன்ஸை வங்கச் செய்யும் உத்தியை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கையாண்டது.
டுபாயில் நேற்று முன்தினம் (19) நடந்த வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க பணியில் பந்துவீசும் நுவன் துஷாரவை மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய நாணயப்படி 4.8 கோடி ரூபாவுக்கு வாங்கியது. இதனால் அந்த அணியின் கையிருப்புத் தொகை வெறும் 5.25 கோடி ரூபாவாக குறைந்தது.
இதன்போது மும்பையின் கையிருப்புத் தொகையை குறைக்கும் வகையில் நுவன் துஷாரவின் விலையை உயர்த்துவதில் பெங்களூர் அணி கடும் போட்டியிட்டது.
50 இலட்சம் ரூபா அடிப்படை தொகைக்கு துஷார ஏலம் விடப்பட்டபோது அவரை வாங்க மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. இதன்போது பெங்களூர் அணி துஷாரவின் விலையை 4.6 கோடிக்கு உயர்த்திய பின் அவரை வாங்கும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. இதனால் மும்பை அணி அவரை வாங்க 4.8 கோடி ரூபாவுக்கு விலை கேட்க வேண்டி ஏற்பட்டது. இதனால் இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவை விடவும் துஷார அதிக விலைக்கு வாங்கப்பட்டார். வனிந்து ஹசரங்கவை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அவரது அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாவுக்கு வாங்கியது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி 4.6 கோடி ரூபாவுக்கு வாங்கியது.
எனினும் இந்த ஏலத்தில் போட்டியிட்ட இலங்கை வீரர்களான தசுன் ஷானக, குசல் மெண்டிஸ், லஹிரு குமார, துஷ்மந்த சமீர மற்றும் சரித் அசலங்க ஆகியோரை எந்த அணிகளும் வாங்க முன்வரவில்லை.
இதுவரை இலங்கை அணி சார்பில் 5 டி20 சர்வதேச பேட்டிகளில் ஆடியிருக்கும் நுவன் துஷார ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதோடு அவரது சிறந்த பந்துவீச்சு 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளாகும்.