நுவரெலியா நகரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் நுவரெலியா பொலிஸார் , இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர்.
நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லயனல் குணத்திலக்க மற்றும் நுவரெலியா பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன ஆகியோரின் ஆலோசனையின் கீழ் நேற்றுமுன்தினம் மாலை 2 மணியளவில் அதிரடி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 100க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவினர் உட்பட இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா நகரில் போதைப்பொருள் பாவனை இடமாக சந்தேகிக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் மற்றும் வியாபார கட்டடத் தொகுதிகள் சோதனையிடப்பட்டன. அத்தோடு நுவரெலியா நகருக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பயணப்பொதிகளை சோதனைக்குட்படுத்தினர். (ஆ.ரமேஷ்)