கொழும்பு_6 வெள்ளவத்தையில் அமைந்துள்ள சைவமங்கையர் வித்தியாலயத்தில் கடந்த 17- ஆம் திகதி திறன் வகுப்பறையானது, பௌதிகவியல் ஆய்வுகூடத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப் பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்களின் நவீன கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, இந்தத் திறன்வகுப்பறையானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Ratnam Foundation, UK மற்றும் வ.ஹரிச்சந்திரன் (விசன்ஸ், அமெரிக்கா) அவர்களின் இணைந்த நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்ட இந்தத் திறன் வகுப்பறையை, விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனம் வைபவ ரீதியாக தொடங்கி வைத்தது.
சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் திருமதி அருந்ததி ராஜவிஜயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ந.தெய்வேந்திரராஜா மற்றும் விசன்ஸ் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி அ.மயூரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு திறன் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
சைவமங்கையர் வித்தியாலய உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்புத்தளை வின்ரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி ரேகா கொட்வின் பால் மற்றும் விசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருந்த நான்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நான்கு முன்மாதிரித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திறன் வகுப்பறை மூலம் க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்கள் திறன் தொழில்நுட்பத்துடன் நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளில் வெவ்வேறு நேரசூசி அடிப்படையில் நாளாந்தம் பயன்பெறுவர் என்று தெரிவித்த பாடசாலை அதிபர், இந்த திறன் வகுப்பறையை வழங்கிய இரட்ணம் பவுண்டேஷன் (இலண்டன்) மற்றும் வ.ஹரிச்சந்திரன் (விசன்ஸ், அமெரிக்கா) அவர்களுக்கும், ஆரம்பித்து வைத்த விசன்ஸ் நிறுவனத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.