“மலையகம் 200″யை ஒட்டியதாக அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், இந்து கலாசார திணைக்களத்துடன் இணைந்து நடத்திவரும் ஆடற்கலைப் போட்டியின் கண்டி மாவட்டத்திற்கான போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9 மணிக்கு கண்டி, மகியாவ கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் நடத்தப்படும் இதில் கண்டி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகள் பங்குபற்றவுள்ளன. இந்து கலாசார திணைக்களத்தின் அழகியல் போதாசிரியர் யசோ பிரசாத், கைலேஸ்வரன் நாட்டிலாயாவின் ஸ்தாபக இயக்குனர் ஜெகநாதன் சஞ்ஜீவன் ஆகியோர் நடுவராக கடமையாற்றுவார்கள் என அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.விஜே தெரிவித்தார்.
இப்போட்டியில் இதுவரை கம்பஹா மாவட்டப் போட்டியும் கொழும்பு மாவட்டத்திற்கான போட்டியும் நடைபெற்றது. கம்பஹா மாவட்டப் போட்டியில் வத்தளை சபரிகிரீசா ஐயப்பன் அறநெறிப் பாடசாலையும் கொழும்பு மாவட்டப் போட்டியில் கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறநெறிப் பாடசாலையும் கொழும்பு, ஜிந்துப்பிட்டி, ஜெயந்திநகர் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறநெறிப் பாடசாலையும் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.
இந்தப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெறும் அறநெறிப் பாடசாலைக்கு ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.