வட மேற்கு சீனாவில் மக்கள் உறக்கத்தில் இருக்கும் வேளை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கான்சூ மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் 6.2 நிச்டர் அளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பூகம்பத்தின் மையப் பகுதியில் இருந்து சுமார் 570 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் வடக்கு ஷான்சி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தில் 116 பேர் கொல்லப்பட்டு மேலும் 400 பேர் வரை காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தவிர, 4,700க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதோடு சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
பூகம்பத்தால் வீடுகள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் பீதியடைந்த மக்கள் பாதுகாப்புக் கருதி வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் ஓடியதாகவும் சின்ஹுவா தெரிவித்தது.
மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.