Friday, March 29, 2024
Home » இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 18 முடிவுகள்

by Prashahini
December 19, 2023 3:12 pm 0 comment

– 50,000 மெட்ரிக் தொன் புசு 11 அரிசி தனியார் துறை மூலம் இறக்குமதி
– சப்ரகமுவ மாகாண பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை உறுதிப்படுத்துவதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் விதந்துரை செய்யப்பட்ட பண்ணைகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்18 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை உறுதிப்படுத்துவதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ள இந்திய பண்ணைகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக 2023-08-14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சமகாலத்தில் வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் 155 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், 2023.12.31 திகதிக்கு முன்னர் மேலும் 18 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் திறந்த சந்தையில் முட்டையின் சில்லறை விலை அதிகரிக்கும் போக்கு நிலவுகிறமையால்,உள்ளுர் திறந்த சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கத்தினால் ஏற்கனவே விதந்துரை செய்யப்பட்ட இந்திய பண்ணைகளிலிருந்து தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. சப்ரகமுவ மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

சப்ரகமுவ மாகாண ஆங்கிலக் கல்வி கற்பித்தலில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கான முறைசார்ந்த பயிற்சியை வழங்கி அவர்களுடைய மொழியறிவு மற்றும் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துகின்ற இயலளவு விருத்தி வேலைத்திட்டமொன்று பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்கீழ் 700 ஆசிரியர்களைத் தெரிவு செய்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த Teaching Knowledge Test (TKT) பாடநெறி மூலம் குறித்த ஆசிரியர்களுக்கு முறைசார்ந்த பயிற்சியை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் நிதியத்திலிருந்து முன்மொழியப்பட்டுள்ள பயிற்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்காக 51 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சப்ரகமுவ மாகாண சபை மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் காப்புறுதி வணிகத்தை ஒதுக்குதல்

அரச தொழில்முயற்சிகள் மீள்கட்டமைப்பின் கீழ் 2011 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆயுட்காலக் காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதி வணிகங்களை வேறானதொரு சட்டரீதியான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2023.03.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆயுட்கால காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதி வணிக நடவடிக்கைகளை குறித்த கூட்டுத்தாபனத்தின் முழுமையான இணைந்த நிறுவனமாக வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோபரேஷன் லயிப் லிமிட்டட் மற்றும் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோபரேஷன் ஜெனரல் லிமிட்டட் இற்கு ஒதுக்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரிக்கபட்டுள்ளது.

4. தெரிவு செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் இறக்குமதி மற்றும் பதனிடல், மற்றும் எண்ணெய் வடிகட்டுதல் மற்றும் ஒலியோரெசின் மற்றும் ஒதுக்கியவாறான மீள் ஏற்றுமதி செய்தல்

இலங்கையின் மசாலாப் பொருட்களை அதன் ஆரம்ப இயல்பில் ஏற்றுமதி செய்வதை விடவும், பெறுமதி சேர் உற்பத்திகளாக ஏற்றுமதி செய்வதால் அதிகளவு இலாபம் ஈட்டக்கூடிய ஆற்றல்வளம் காணப்படுகின்றது. சர்வதேச சந்தைக்காக முழுமையான முடிவுப்பொருளாகவும், உயர்தரத்திலான பெறுமதி சேர் உற்பத்திகளைத் தயாரிப்பதற்காக இயலுமாகும் வகையில் ஆரம்ப இயல்பிலுள்ள ஒருசில மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் பெற்ற முன்னணிக் கம்பனிகள் சில கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. அதற்கமைய, குறித்த உற்பத்தியாளர்களுக்கு தமது சந்தை வாய்ப்புக்களை விரிவாக்கம் செய்வதற்காக வாய்ப்பு வழங்குவதற்காக, தெரிவு செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் இறக்குமதி மற்றும் பதனிடல், மற்றும் எண்ணெய் வடிகட்டுதல் மற்றும் ஒலியோரெசின் மற்றும் ஒதுக்கியவாறான மீள் ஏற்றுமதிசெய்வதற்கான நடபடிமுறைகளை அமுல்படுத்துவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. அவுஸ்திரேலிய அரசின் பிரதான நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விருத்திக்கான நல்லாட்சி வேலைத்திட்டம் மற்றும் சந்தை அபிவிருத்தி வசதிகள் வேலைத்திட்டத்தின் காலப்பகுதியை நீடித்தல்

விருத்திக்கான நல்லாட்சி வேலைத்திட்டம் மற்றும் சந்தை அபிவிருத்தி வசதிகள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசு மற்றும் இலங்கை அரசுக்கும் இடையில் 2017 ஆம் ஆண்டில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வேலைத்திட்டங்களுக்காக மேலும் 41.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மேலதிக நிதியுதவியை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு, இவ்விரண்டு கருத்திட்டங்களையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசுடன் இணைந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் சோளம் இறக்குமதி செய்தல்

திறந்த சந்தையில் போதியளவு சோளம் இன்மையால், கோழி உணவு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதற்காக தற்காலிக நடவடிக்கையாக கால்நடை உறுபத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மூலம் 15,000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்காக வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தகக் (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு உயர்ந்தபட்சம் 15.000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதிக்கான பெறுகையை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. யான் ஓயா நீர்த்தேக்கம் மற்றும் இடதுகரை கால்வாய் நிர்மாணிக்கப்பட்டமையால் காணிகள் இழக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்பட வேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக நட்டஈடு வழங்கல்

யான் ஓயா நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கும் போது ஹொரவப்பொத்தான மற்றும் கோமரன்கடவல பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரிய காணிகளும், இடதுகரை கால்வாய் நிர்மாணிக்கப்பட்ட போது ஹொரவப்பொத்தானஈ பதவிய மற்றும் ஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரிய காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு காணி இழக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பகுதியினருக்கு மாற்று வயல் காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், வயல் காணிகளாக அபிவிருத்தி செய்வதற்காக குறித்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் காணிகள் இன்மையால், கையகப்படுத்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு வயல் காணிக்குப் பதிலாக மேலதிக இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு 2023.03.20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்த கீழ்க்காணும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• யான் ஓயா நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கப்பட்டமையால் காணிகள் இழக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக வழங்குவதற்குப் போதியளவு காணி அபிவிருத்திக்காக விடுவிப்பதற்கு இயலுமை இன்மையால், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிராததும், வெளி மாவட்டங்களில் வசிக்கின்ற இதுவரை மாற்று நீர்ப்பாசனக் காணிகள் வழங்கப்படாத குடும்பங்களுக்காக காணிகளுக்குப் பதிலான 1.8 மில்லியன் ரூபாய்கள் வீதம் இழப்பீட்டுத் தொகையை செலுத்தல்.

• இடதுகரை கால்வாய் நிர்மாணிக்கப்பட்டமையால் காணிகள் இழக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக வழங்குவதற்குப் போதியளவு காணி அபிவிருத்திக்காக விடுவிப்பதற்கு இயலுமை இன்மையால்,1 ½ ஏக்கர் வயல் காணிக்குப் பதிலாக 1.8 மில்லியன் ரூபாய்கள் வீதம் இழப்பீட்டுத் தொகையை செலுத்தல்.

8. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களில் பயிற்சி/புலம்பெயர் வளநிலையத்தை நிறுவுதல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு துரிதமானதும் செல்கின்ற நாடுகளை இலக்கு வைத்து விசேட பயிற்சி வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் நடாத்தப்படுகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடங்களில் குறைந்தளவு வசதிகளுடன் இப்பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அதனால், புலம்பெயர் தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குச் சொந்தமான பயிற்சி நிலையங்களை யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களில் நிறுவுவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவும் வேலைத்திட்டம்

இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவுகின்ற முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவி வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய பெறுகை திணைக்களத்தின் விதந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மதிப்பீட்டுச் செலவு 526.20 மில்லியன் ரூபாய்களாவதுடன், 2024 ஆம் ஆண்டுக்காக 310 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தேசிய வானூர்தி தேடல் மற்றும் மீட்புத் திட்டத்திற்கான அங்கீகாரம்

2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய சிவில் விமான சேவைகள் அதிகாரசபையால் தேசிய வானூர்தி தேடல் மற்றும் மீட்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,அது 2347/02 இலக்க 2023.08.28 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதியாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதியை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2023.03.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் அவர்களின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் உரிமையுள்ள அரச அலுவலர்களுக்கு சலுகை வழங்குதல்

2023 உள்ளூராட்சி தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமையால் தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையார் நாயகத்தால் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உடன்பாடு கிடைத்துள்ளது. அந்த குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் செயற்படுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(i) தேர்தலில் போட்டியிடும் அதிகார எல்லையிலிருந்து வெளியேயுள்ள சேவை நிலையத்துக்கு இடமாற்றம் செய்தமையால்,சிரமத்துக்குள்ளான அரசியல் உரிமை கொண்ட அலுவலர் ஒருவர் அது தொடர்பாக மேன்முறையீடு செய்யப்படின், நிறுவன தலைவர் அது தொடர்பாகக் கவனம் செலுத்தி குறித்த சேவை நிலையத்தில் அரசியல் கருமங்களிலோ அல்லது அரசியல் பரப்புரைகளில் ஈடுபடாமல் பணியாற்றுவதாக குறித்த அலுவலரிடமிருந்து சத்தியக் கடதாசியொன்று பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அலுவலரின் நிரந்தர சேவை நிலையத்திற்கு கடமைக்கு செல்வதற்கு இடமளித்தல்.

(ii) 2023-04-25 திகதி தொடக்கம் 2023-04-08 ஆம் திகதி வரையான காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக கருதி அடிப்படை சம்பளம் வழங்குதல்.

(iii) 2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக வேட்புமனு நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ள அலுவலர்கள் 2023-05-08 திகதி 07/2023 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய கட்டாயமாகக் கடமைக்கு சமூகமளிக்குமாறு பணித்தல்.

(iv) அதற்கமைய, அரசியல் உரிமை கொண்ட அரச அலுவலர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மேற்குறித்த விடயங்கள் அடங்கலாக பொது நிர்வாக சுற்றறிக்கையை வெளியிடுதல்.

13. இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுச் சட்டமூலம்

உண்மை மற்றும் மீளிணக்க பொறிமுறை தொடர்பான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2023-04-03 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சரால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய ‘இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. பொது மக்கள் மற்றும் ஆர்வங்காட்டும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் தமது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிக்கக்கூடிய வகையில் குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காக கௌரவ ஜனாதிபதி, நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டத்துக்கான திருத்தம்

அறவீட்டுக்கான ஆகக்குறைந்த புரழ்வு 2024-01-01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூபா 120 மில்லியனிலிருந்து ரூபா 60 மில்லியன் வரை குறைப்பதற்காக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2023-10-30 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தை திருத்தம் செய்தல்

1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தில் காணப்படுகின்ற மட்டுப்பாடுகளால் போட்டித்தன்மையான மற்றும் துரிதமாக மாற்றமடையும் நிதிச் சந்தையில் செயற்படுவதற்கு தேசிய சேமிப்பு வங்கிக்கு சிரமங்கள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், நிறுவனத்துக்காக நிலைபெறுதகு வளர்ச்சியை பேணுதல், புதிய வர்த்தக வாய்ப்புக்களை அடையாளம் காணுதல் மற்றும் புதிய வர்த்தக மாதிரியை கட்டியெழுப்புவதன் மூலம் வங்கியின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் சில பிரிவுகளை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய, திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. டிஜிற்றல் அபிவிருத்திக்கான நிறுவன ரீதியான மறுசீரமைப்பு

இலங்கையின் டிஜிற்றல் அபிவிருத்தியில் மிகவும் பயனுள்ள வகையில் அமுல்படுத்துவதற்கும், அதன் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், விரிவான அதிகாரங்களுடன் கூடிய நிறுவனமொன்றை உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச டிஜிற்றல் அபிவிருத்தி செயன்முறையை நெறிப்படுத்தவதற்காக மூலோபாய மற்றும் கொள்கை ரீதியான தலைமைத்துவத்தை வழங்குதல், முதலீட்டு ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் கண்காணிப்பதற்காக டிஜிற்றல் அபிவிருத்தி முகவரகமொன்றைத் நிறுவுவதற்கும்,தேசிய செயற்கை நுண்ணறிவு மூலோபாயத்தை அமுல்படுத்துவதற்காக டிஜிற்றல் அபிவிருத்தி முகவரகத்தின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய நிலையத்தை நிறுவுவதற்கும் இயலுமாகும் வகையில் 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தில் தேவையான திருத்தங்களை அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

அதற்கமைய, திருத்தச் சட்டமூலத்தைதயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தொழில்நுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கீரி சம்பா வகை அரிசிக்கு சமமான 50,000 மெட்ரிக் தொன் புசு 11 வகை அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு வாய்ப்பு வழங்குதல்

சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக உணவு கொள்கைகள் குழுவின் விதந்துரைக்கு அமைய 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக 2023-11-20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் கீரிச் சம்பா அரிசி மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகளில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி, விலையின் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கத்துடன், கீரி சம்பா அரிசிக்கு சமமான 50,000 மெட்ரிக் தொன் புசு 11 அரிசியை தனியார் துறை மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பணத் தூய்மையாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாத்துக்கு நிதி வழங்குதலை முறியடிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு கரும நிர்ணய ஆலோசனை மற்றும் செயலணியை நிறுவுதல்

பணத் தூய்தாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாத்துக்கு நிதியளித்தலை ஒழிப்பதற்காக தேசிய ஒருங்கிணைப்பு குழு, தொடர்புடைய அரச நிறுவனங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகள் மற்றும் பணத் தூய்தாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்தக்கு நிதியளித்தலை ஒழிக்கும் முயற்சிகளுடன் தொடர்புபட்டபிரதிநிதிகளை கொண்டமைந்துள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு குழுவிலுள்ள செயன்முறையை முறைமைப்படுத்துவதற்காக குறித்த குழுவுக்கான கரும நிர்ணய ஆலோசனை வரைபு செய்யப்பட்டுள்ளது.

கரும நிர்ணய ஆலோசனை மற்றும் செயலணியை நிறுவுதல். பணத் தூய்தாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாத்துக்கு நிதி யளித்தலை ஒழிக்கும் போது தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது அரச நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள். ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கிடையில் வினைத்திறனான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக ஒரு செயலணியை நிறுவ வேண்டியது கட்டாயமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு உத்தேச கரும நிர்ணய ஆலோசனைக்காகவும், செயலணியை நிறுவுவதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT