– ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
துபாயில் தற்போது (19) இடம்பெற்று வரும் IPL 2024 மினி ஏலத்தில், இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளரான வணிந்து ஹசரங்க சன்ரைசர்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமான குறித்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டில்லி கெபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் போட்டி போட்டு வீரர்களை கொள்வனவு செய்து வருகின்றன.
இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளதோடு, இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உள்ளிட்ட 77 வீரர்களை குறித்த 10 அணிகளும் ஏலத்தில் எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வணிந்து ஹரசங்கவை சுமார் ரூ. 1.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, IPL வரலாற்றில் முதன் முறையாக ரூ. 20½ கோடி இந்திய ரூபாய்க்கு (2.46 மில்லியன் டொலர்) அவுஸ்திரேலிய வீரரும் அவ்வணியின் தலைவருமான பெட் கம்மின்ஸ் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பபட்டுள்ளார். அதுவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினாலேயே என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்கை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மேற்கிந்திய வீரர் ரோவ்மேன் பவலை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7.4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் ரோவ்மேன் பவலை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராஜஸ்தான் பவலை எடுத்தது.
ரூ. 10 கோடிக்கும் அதிகமான இந்திய ரூபாவுக்கு அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் வாங்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில் அவரை ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியே வாங்கியுள்ளது .
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹரி ப்ரூக்கை ரூ. 4 கோடிக்கு டெல்லி கெபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
உலகக்கிண்ணத் தொடரில் அதிரடியாக ஆடி கவனம் ஈர்த்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ரூ. 2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பபட்ட ஷர்துல் தாகூரை அணியில் எடுக்க சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் கடும் போட்டியிட்ட நிலையில், சென்னை அணி ரூ. 4 கோடி ஏலத்தை வென்றது.