கொழும்பு மாநகர சபை நிர்வாக பிரதேசத்தில் ஆபத்தான நிலையில் 558 பழமையான மரங்கள் காணப்படுவதாக மாநகர சபையின் ஆணையாளர்
சந்திராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அந்த மரங்களில் பல 100 வருடத்துக்கும் அதிக பழமை வாய்ந்தவை என தெரிவித்துள்ள அவர், மேற்படி 558 மரங்களில் 214 மரங்களை அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபையின் தலையீட்டுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கொழும்பு நகர் புறங்களின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் பல்வேறு தரப்பினரின் தகவல்களின்படி முதலில் ஆபத்தான நிலையில் 330 மரங்களே காணப்படுவதாக தமக்கு அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளுக்கு அமைய அந்த தொகை 558 ஆக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்