கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நேற்று முன்தினம் பெய்த கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள்
வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். அத்தோடு தருமபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைகளுக்குள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் நேற்று (15) இப்பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. பாதிப்புக்கள் தொடர்பாக கிராம சேவையாளர், பிரதேச செயலக அதிகாரிகள் விபரங்களை பெற்று வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (15) நண்பகல்வரை 394 குடும்பங்களை் சேர்ந்த 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி குறூப் நிருபர்