இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது நேற்று முன்தினம் (13) மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (14) முற்படுத்தப்பட்டதை அடுத்து , கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
யாழ்.விசேட நிருபர்