பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நாட்டில் நீண்ட காலத்தின் பின்னர், புதிய அபிவிருத்தித் திட்டங்களை
ஆரம்பிக்க முடிந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன
தெரிவித்தார்.கொழும்பு 06, கிருலப்பனை, ரொபர்ட் குணவர்தன மாவத்தையை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.இத்திட்டம் 1.2 பில்லியன் ரூபா செலவில் பூர்த்தியாக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டத்துக்கென 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்ன ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட
அமைச்சர் பந்துலகுணவர்த்ன மேலும் தெரிவித்ததாவது.
இதுவரை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிநாட்டுக் கடன் மற்றும் உதவிகளைப் பெற்றுத்தான் வீதிகள் உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தை நடத்துவதற்கு தேவையான தொடர் செலவினங்களை ஈடுசெய்யும் அளவுக்கு நாட்டின் எந்தவொரு அரசாங்கத்திடமும் போதுமான நிதியிருக்கவில்லை. வரி வருமானமும் அரசாங்க வருமானமும் இல்லாதிருந்தன.
எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் வெளிநாட்டுக் கடன்களைக் கொண்டும் மற்றும் பணம் அச்சிட்டுமே வேலைகளைச் செய்தன.
தற்போதைய சூழ்நிலையில் பணத்தை அச்சடிக்கும் திறன் மத்திய வங்கிக்கு இல்லை. கடனைச் செலுத்தாத நிலையில் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை.
வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம், 2024ல் பணம் கிடைத்தவுடன், நாட்டை மீண்டும் உழைக்கும் நாடாக மாற்ற முடியும். இதற்காக மத்திய அரசாங்கம், மாகாண சபைகள், மாநகர சபைகள், உள்ளூராட்சி சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் வழிநடத்துவதற்கு பிரதமரின் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவம் வழங்கப்படும். இதன்படி, மத்திய அரசாங்கம், மாகாண சபை, மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நிதியானது ஜனவரி மாதம் முதல் மிகவும் திறம்படவும் திறமையாகவும் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். —