ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான், நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்ற சமூகமாக மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இன்று நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசகராக மலையக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.
வடிவேல் சுரேஷ், தனது அரசியல் வாழ்க்கையை இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஆரம்பித்து, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் பாசறையில் வளர்ந்தவர். மலையகத்தில் மிக முக்கியமான தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (LJW) பொதுச் செயலாளராக இருந்து இன்று ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை அவரது கடின உழைப்புக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக கருதப்படுகிறது.
மேலும் அவருடைய இப்பதவி காலத்தில் மலையக மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாழ்த்துவதாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.