SLBFE இல் பணியாற்றிய அதிகாரி கைது
ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடமிருந்து பணம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்தனர். இந்த அதிகாரி மொறட்டுவை பிரதேசத்தில் வசித்து வருகிறார். மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணிடம் ருமேனியாவில் வேலை வாங்கி தருவதாக கூறிய இவ்வதிகாரி, 05 இலட்சம் ரூபாவை அப்பெண்ணிடமிருந்து பெற்றுள்ளார்.
எனினும், வேலை வாய்ப்பு வழங்கப்படாததால் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவில் அப்பெண் முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் (13) இவ்வதிகாரி கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 05 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணை மற்றும் 10,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.