பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹூல் புஹாரி, ஸஹீஹூல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ரவி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பராயன மஜ்லிஸின் தமாம் வைபவம் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சங்கைக்குரிய அஷ் ஷெய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி) பின் அஷ் ஷெய் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் அலவியதுல் காதிரி தலைமையில் நடைபெறவிருக்கிறது.
இறைநேசச் செல்வர்கள், நல்லோர்கள் வழியில் மக்களுக்கு அறிவுரை வழங்கி தாங்களும் வாழ்ந்து காட்டி மனித சமுதாய மறுமலர்ச்சிக்காக உழைத்தார்கள். இத்தகைய ஸூபியாக்கள் பலரும் இலங்கைக்கு வருகை தந்து பாவா ஆதம் (அலை) என்று அழைக்கப்படும் புனித தலத்தை தரிசித்துச் சென்ற வரலாறு உள்ளது.
கெச்சிமலையில் அடங்கியுள்ள செய்னு அஷ்ரப் வழியுள்ளாஹ் அவர்கள் இதே நோக்கத்துதோடு கப்பல் மூலமாக இலங்கை வந்தார். கடலின் அகோரமும், காற்றின் யோகமும் கப்பலை திசை திருப்பி மெச்சுப் புகழ் கெச்சிமலை அன்மித்தே பேருவளையில் இறங்கச் செய்தது. அவர் தனது இருப்பிடத்தை அங்கு அமைத்துக் கொண்டார், அங்கிருந்து இறைபணியைத் தொடர்ந்தார், ஆன்மிக மலர்ச்சி கண்டார்.
1882 ஜோர்ஜ் அரசின் கவர்னராக இலங்கையில் கடமையாற்றிய சேர் ஆதர் ஹென்றி கோடன் காலிக்கு தன்னுடைய உத்தியோக கடமைக்காகச் செல்லும் வழியில் அவர் பயணம் செய்த குதிரை வழிதவறி பேருவளை சுங்கப் பாதை வழியில் சென்று ஓர் இடத்தில் நின்றது. அங்கு இருந்த ஒரு பழைய புதைகுழியின் அருகில் நின்று பணிந்தது.
இந்த ஆச்சரியமான சம்பவம் கவர்னரை சிந்திக்கச் செய்தது. அங்குள்ள மக்களிடம் கவர்னர் விசாரித்ததில் இந்த இடம் கெச்சிமலை என்றும், அடங்கப்பட்டிருக்கும் அற்புதமான வழியுள்ளாஹ் பற்றியும் கூறப்பட்டது. உடனே கவர்னர் ஜோர்ஜ் அரசின் சார்பில் இந்த இடத்தை அன்பளிப்பாக வழங்கும்படி உத்தரவிட்டார். பின்னர் மக்கள் ஒன்றுசேர்ந்து கெச்சிமலையை உருவாக்கினார்கள்.
வெள்ளிக்கிழமை தவிர இந்த புனித மஜ்லிஸ் தினமும் அதிகாலை தஹஜ்ஜத் தொழுகையுடன் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மர்ஹூம் அஷ் செய்ஹூ ஹம்ஸா ஆலிம் இதற்குத் தலைமை தாங்கி நீண்ட காலம் மஜ்லிஸை நடத்தி வந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அஷ் ஷெய்க் மர்ஹூம் ஷூகைப் ஆலிம் தலைமை தாங்கி நடாத்தினார். அதற்குப் பின்னர் அவர்களது சகோதரரான காலிப் அலவி ஹாஜியார் அலவியதுல் காதிரி அவர் மறைவுக்கு பின்னர் தற்போது அவரது புதல்வர் சங்கைக்குரிய மௌலவி ஸக்கி அஹ்மத் (அஷ்ரபி) பின் அஷ் ஷெய்க் காலிப் அலவி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். எதிர்வரும் 16 ஆம் இரவு கத்தாத் ராதிப், விஷேட மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்று, தர்காவில் அடங்கப்பட்டுள்ள அஷ் ஷெய்க் அஷ்ரப் வலியுல்லாஹ் ஸிமயாரத் நிகழ்ச்சியும் இடம்பெறும். 17 ஆம் திகதி அதிகாலை அல் குர்ஆன் தமாம் வைபவம் நடைபெறும்.
தமாம் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 53 ஆவது வருடமாகவும் நேரடியாக அஞ்சல் செய்யும்.