மருதமுனை கிறிஸ்டல் விளையாட்டுக் கழகம் அதன் 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த கழகத்தின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் ‘கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம் – 2023’ நிகழ்வு கழகத்தின் நிறைவேற்றுத் தலைவர் எம்.ஐ. நுபைறுடீன் மற்றும் கழகத்தின் தலைவர் டொக்டர் எம்.ஏ.எம்.அஸீம் ஆகியோர் தலைமையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர்க்கொத்தன் கலையரங்கில் நடைபெற்றது.
கழகத்தின் பொதுச்செயலாளர் எச். எம். சுஹைப் ஒருங்கிணைப்போடு நடைபெற்ற இந்நிகழ்வில் கிறிஸ்டல் விளையாட்டுக் கழகத்தின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்த கழக உறுப்பினர்களின் உறவுகளான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று சித்தியடைந்த மாணவர்கள், உயர்தர பரீட்சையில் உயர்பெறுபேறு பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள், சிங்கள மொழி போட்டி நிகழ்ச்சியில் தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவி ஆகியோர் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
கிறிஸ்டல் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.சி.ஜஹாங்கீர் இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபராக பதவி உயர்வு பெற்றமைக்காக பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி இங்கு கெளரவிக்கப்பட்டார்.
அதேபோன்று கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாக இருந்து செயற்பட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். இதில் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் உரையாற்றியதுடன், நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் தொகுத்து வழங்கினார்.
பெரியநீலாவணை விசேட நிருபர்…