இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய கண்காணிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய கிரிக்கெட் கட்டமைப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்து அதனை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த திட்டமொன்றை வகுக்கவும், இளையோர் முதல் தேசிய மட்டம் வரை நேர்த்தியான கட்டமைப்பையும், அபிவிருத்தியையும் மேற்கொள்ளும் முகமாக சனத் ஜயசூரியவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்ததுடன், உலகக்கிண்ணத்தில் தோல்விகளை சந்தித்து சம்பியன்ஷ் கிண்ண வாய்ப்பை இழந்தது. அதேநேரம் இலங்கை 19 வயதின் கீழ் அணி ஆசியக்கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.
அணியின் இவ்வாறான மோசமான பிரகாசிப்புகள் காரணமாக பல்வேறு மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டு வரும் நிலையில், சனத் ஜயசூரியவுக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரிய இலங்கை அணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக ஏற்கனவே செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.