கடற்றொழில் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்: 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக 8400 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் 6077 மில்லியன்கள் மூலதனச் செலவாகவும் 2323மில்லியன் ரூபா மீண்டுவரும் செலவாகவும் உள்ளது.
அரசாங்கத்தின் இந்நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக, நாட்டின் கடற்றொழிலை வளப்படுத்தும் வகையில் மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீடுகளையும் ஊக்குவித்து வருகிறோம்.
எரிபொருள் விலை உயர்வு கடற்றொழிலாளர்களின் தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. பல்வேறு காரணங்களாலேயே சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கின்றன.இவ்வாறு அதிகரிக்கும்போது இலங்கையிலும் அதன் விலைகள் அதிகரிக்கின்றன.
எரிபொருள் செலவு போன்ற உற்பத்திச் செலவுகளைக் குறைக்க பல்வேறு மாற்று வழிமுறைகளை பயன்படுத்தப்படும். அந்த வகையில், படகுகளில் Battery Motors பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்கிறோம். இது மீனவர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் எரிபொருள் பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். எமது அமைச்சு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில் சட்டமொன்றை தயாரித்து வருகிறது.இது,தற்போது சட்ட வரைவு என்ற நிலையிலேயே உள்ளது.இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினை யை, ராஜதந்திர ரீதியிலேயே அணுக வேண்டியுள்ளது.இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் மீன்படி விடயம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்தரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும்.