Friday, March 29, 2024
Home » காசாவில் தொடரும் தாக்குல் இடையே இஸ்ரேல் தனிப்படும் நிலை அதிகரிப்பு

காசாவில் தொடரும் தாக்குல் இடையே இஸ்ரேல் தனிப்படும் நிலை அதிகரிப்பு

ஐ.நா. வாக்கு: பைடனும் விமர்சனம்

by gayan
December 14, 2023 6:38 am 0 comment

காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் கொடுத்திருக்கும் சூழலில் இராஜதந்திர ரீதியில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான குண்டு வீச்சுகளால் இஸ்ரேல் சர்வதேச அளவில் ஆதரவை இழந்து வருவதாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு காசாவில் சமகாலத்தில் உக்கிர போர் இடம்பெற்றுவரும் நிலையில் இஸ்ரேலியப் படை நேற்று இதுவரை இல்லாத அளவில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. நேற்றைய உக்கிர மோதல்களில் மூத்த கேணல் ஒருவர் உட்பட பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் ஷெர்ஜையா பகுதியில் பலஸ்தீன போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதல் ஒன்றில் 44 வயது கேணல் இட்சக் பென் பாசத் கொல்லப்பட்டுள்ளார். கொலாணி படையணியின் தளபதியான இட்சாக் காசா மீதான தரைவழி தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இஸ்ரேலிய படைகளில் கொல்லப்பட்ட மூத்த உறுப்பினராக உள்ளார். இதே தாக்குதலில் மேலும் ஒன்பது இஸ்ரேலிய துருப்பினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவில் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருவதோடு மழையுடனான குளிர் காலம் ஆரம்பிப்பது காசாவில் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்று உதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் 85 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அடிப்படை வசதிகள் இல்லாத தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை கொல்லப்பட்டு 240 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் சர்வதேச அனுதாபத்திற்கு மத்தியிலேயே காசா மீது இஸ்ரேல் போர் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் அது தொடக்கம் காசாவில் முழு முற்றுகையை செயற்படுத்திய இஸ்ரேல் அங்கு குடியிருப்புகள், மருத்துவமனைகள் என்று அனைத்து உட்கட்டமைப்புகள் மீது வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக சரமாரி தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 18,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். தவிர ஆயிரக்கணக்கானவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

டிசம்பர் ஆரம்பத்தில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தம் முறிந்ததை அடுத்து இஸ்ரேலியப் படை தனது தரைவழி தாக்குதலை வடக்கு காசாவில் இருந்து தெற்கை நோக்கி விரிவுபடுத்தியதோடு தெற்கின் பிரதான நகரான கான் யூனிஸ் கடும் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது.

வடக்கு காசாவில் தனது இலக்குகள் பெரும்பாலும் நிறைவேறி இருப்பதாக இஸ்ரேல் முன்னதாக குறிப்பிட்டபோதும் அங்கு இடிபாடுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து உக்கிர மோதல்கள் நீடித்து வருகின்றன.

வடக்கு காசாவில் உள்ள காசா நகரில் ஏற்பட்ட மோதலிலேயே ஒரே தாக்குதலில் பத்து இஸ்ரேலிய துருப்பினர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

“காசாவை அடிபணியச் செய்ய முடியாது”

இந்த சம்பவம் இஸ்ரேலால் காசாவை அடிபணியச் செய்ய முடியாது என்பதை காட்டுகிறது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

“உங்களது தோல்வியுற்ற தலைமை உங்களது வீரர்களின் உயிர்களை பொருட்படுத்தவில்லை என்பதை சியோனிஸ்ட்களுக்கு கூறிக்கொள்கிறோம். தொடர்ந்தும் நீங்கள் அங்கு இருந்தால், உங்கள் உயிர்களுக்கு விலைகொடுக்க வேண்டி இருக்கும் என்பதோடு பெரும் இழப்புகளை சந்திப்பீர்கள். இறைவன் நாடினால் ஏமாற்றம் மற்றும் இழப்பையே சந்திப்பீர்கள்” என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கில் ஜபலியா பகுதியில் உக்கிர மோதல் நீடிக்கிறது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றை இஸ்ரேலிய துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதாகவும் மருத்துவப்பணியாளர்களை மோசமாக நடத்துவதாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் கான் யூனிஸை நோக்கி படையெடுத்திருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் அண்மைய நாட்களில் முன்னேற்றம் கண்டு அந்த நகரின் மையப் பகுதியை அடைந்துள்ளது. கடுமையான மோதல் நீடித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய துருப்புகளால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“மத்திய காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் மேலும் முன்னேறவில்லை. அவர்கள் கடும் எதிர்ப்பை சந்திப்பதோடு துப்பாக்கிச் சத்தங்கள், வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன” என்று மத்திய காசாவில் இருந்து 2 கிலோமீற்றருக்கு அப்பால் வசிக்கும் ஐந்து குழந்தைகளின் தந்தையான அபூ அப்தல்லா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய துருப்புகள் புல்டோசர்களையும் எடுத்துச் சென்றிருப்பதோடு ஹமாஸ் தலைவர் யஹ்யா அல் சின்வாரின் கான் யூனிஸ் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீதிகளை தகர்த்து வருகிறது. “அவர்கள் எங்கு சென்றாலும் எமது நிர்க்கதியான பொதுமக்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகளையும் அழிவுகளையுமே தந்து வருகிறார்கள்” என்று அபூ அப்துல்லா கூறினார்.

வடக்கு காசாவில் உள்ள வைத்தியசாலைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளன. தெற்கில் ஒருசில மருத்துவமனைகள் பகுதி அளவில் இயங்கி வரும் நிலையில் அங்கு காயமடைந்தவர்கள் நிரம்பி வழிகின்றனர்.

“நான் உட்பட்ட மருத்துவர்கள் சிறுவர்களின் உடல்களை மிதித்துக்கொண்டு சென்றே இறந்து வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்” என்று கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் கிறிஸ் ஹூக் தெரிவித்துள்ளார்.

காசாவுக்குக் கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள ரபா பகுதியில் மாத்திரமே விநியோகிக்க முடியுமாக இருப்பதாக சர்வதேச நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தார்ப் பாய்களின் கீழ் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருப்பும் நிலையில் இந்த வாரமாகும்போது அங்கும் நிலைமை மோசமடைந்து வருகிறது.

ஐ.நா மனிதாபிமான அலுவலகத்திற்கான காசா குழுவின் தலைவரான கெம்மா கொனல் கூறியதாவது, “நேற்று இரவு கடும் மழை மற்றும் காற்று வீசியது. தற்காலிக முகாம்களில் இருக்கும் இந்த மக்கள் பரிதாபத்தை சந்தித்து வருகிறார்கள்” என்றார். இவர் தற்போது ரபாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்.

எகிப்து எல்லை ஊடாக உதவிகளை அதிகரிப்பதற்கு எகிப்து ஆதரவளித்து வருகிறது. பொதுமக்கள் வருவதற்கு உதவியாக ரபாவில் நான்கு மணி நேர போர் நிறுத்தம் ஒன்றையும் அது அறிவித்துள்ளது. எனினும் பாதுகாப்பற்ற சூழலில் உதவிகள் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐ.நா வாக்கு

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசர போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தின் மீது அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய நிலையில், செயற்படுத்துவதற்கு எந்த கடப்பாடு ம் இல்லாத பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழைப்புக்கு அதிகப் பெரும்பான்மை நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் முக்கால் பங்கு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததோடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து வெறுமனே எட்டு நாடுகளே எதிராக வாக்களித்தன.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பெரும்பாலான நாடுகள் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு ஆதரவாக உள்ளன என்று பைடன் தெரிவித்தார்.

“ஆனால் கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளை நடத்துவதால் இஸ்ரேல் ஆதரவை இழக்க ஆரம்பித்துள்ளது” என்று வொஷிங்டனில் நன்கொடையாளர் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பைடன் தெரிவித்தார்.

உளவுத்தகவல்களை பகிரும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளிகளான கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், “ஹமாஸை தோற்கடிப்பதன் விலை அனைத்து பலஸ்தீனிய குடிமக்களின் தொடர்ச்சியான துன்பமாக இருக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கடும்போக்கு அரசில் இருந்து மாறவேண்டும் என்றும் சுதந்திர பலஸ்தீன நாடு ஒன்றை மறுக்க முடியாது என்றும் பைடன் கூறியுள்ளார். இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான விரிசலை வெளிப்படையாகக் காட்டுவதாக உள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

போருக்குப் பின்னரான காசாவின் எதிர்காலம் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை நெதன்யாகு நிராகரித்திருப்பதோடு காசாவை மேற்குலக ஆதரவு பெற்ற பலஸ்தீன அதிகார சபை ஆட்சி புரிய வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பையும் அவர் எதிர்த்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT