Home » மத்ரஸா மாணவனின் மரணம்; அழித்த CCTV காட்சியை எடுக்க முடியுமா என கேட்ட மௌலவி

மத்ரஸா மாணவனின் மரணம்; அழித்த CCTV காட்சியை எடுக்க முடியுமா என கேட்ட மௌலவி

- CCTV தொழில்நுட்பவியலாளர் வழங்கிய வாக்குமூலம்

by Rizwan Segu Mohideen
December 13, 2023 2:39 pm 0 comment

கடந்த டிசம்பர் 05ஆம் திகதி சாய்ந்தமருது மத்ரஸாவில் சடலமாக மீட்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவனின் மரணம் தொடர்பில், சிசிடிவி (CCTV) தொடர்பான பணியில் ஈடுபடும் தொழிநுட்பவியலாளர் ஒருவர் அதிர்ச்சி தரும் வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.

குறித்த மத்ரஸாவின் மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என, குறித்த தொழிநுட்பவியலாளர் எமது செய்தியாளரிடம் குறிப்பிட்டார்.

சம்பவ தினமன்று இரவு 7.00 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிரிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து எல்லாவற்றையும் வன்தட்டில் (HARD DISK) இருந்து அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு நான் என்னால் வரமுடியாது என மௌலவியிடம் கூறி விட்டேன். அத்துடன் வன்பொருளில் உள்ளவற்றை ஏன் அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து இரவு 11.00 மணியளவில் மாணவன் இறந்த சம்பவம் தெரிய வந்ததைத் தொடர்ந்து, எனது சகோதரர் நாம் சிசிரிவி பணி மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.

நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் என கேட்டேன். அப்பாடசாலையில் சிசிரிவி வன்தட்டில் காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன் வன்பொருளை அங்கிருந்து அகற்றி செல்லுமாறு பதற்றத்துடன் கூறினார். அத்துடன் ரூ. 1,000 காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வன்தட்டை வந்து பொருத்தி தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறி இருக்கிறார்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்து இருக்கின்ற நிலையில் மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுத்து, அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார். என சிசிடிவி தொடர்பான பணியில் ஈடுபடும் தொழிநுட்பவியலாளர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த டிசம்பர் 05ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயதான எம்.எஸ். முஸ்அப் எனும் அங்கு கல்வி கற்று வந்த மாணவன் மலசலகூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய நிலையில் அங்கு வந்திருந்த சாய்ந்தமருது பொலிஸாரால் மத்ரஸா நிர்வாகியாகியான மௌலவி கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் வைத்தியசாலையின் குறித்த மாணவனின் மரண விசாரணை அறிக்கையில் கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாறுக் ஷிஹான்

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு; குர்ஆன் மத்ரஸா நிர்வாகி கைது

மத்ரஸா மாணவனின் மரண விசாரணை அறிக்கை வெளியீடு

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT