ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவரது 170 ஆவது படத்தின் தலைப்பு இன்று (12) மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஜினி இரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
ஜெயிலர் படத்தின் தாறுமாறான வெற்றியால் ரஜினியும், அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாளான இன்று மாலை , ரஜினி நடிக்கும் 170ஆவது படத்தின் டைட்டில் மற்றும் பிறந்த நாள் டீசர் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனிருத் இசையமைப்பில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, இப்படத்திற்கு ‘வேட்டையன்’ எனப் பெயரிட்டுள்ளதாகவும், ரஜினி, அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று ரஜினியின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.