இந்தியாவின் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகளின் ஏலத்தில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து விலைபோகவில்லை.
அண்மையில் நடந்த அவுஸ்திரேலிய பிக் பாஷ் தொடரில் திறமையை வெளிப்படுத்தி தொடர் நாயகி விருதை வென்றபோதும் 30 இலட்சம் அடிப்படை விலைக்கு மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் போட்டியிட்ட சமரியை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
‘டீன்ட்ரா டொட்டின் மற்றும் சமரி அத்தபத்து ஏலம் போகாதது தொடர்பில் எல்லோரையும் போல் நானும் குழப்பம் அடைந்தேன். ஐந்து அணிகளும் சரியாக செயற்பட்டு ஏலம் எடுக்கவில்லை’ என்று இந்தியாவின் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லி எக்ஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை நடந்த ஏலத்தில் 2024 மகளிர் பீரிமியர் லீக் தொடருக்காக மொத்தம் 165 வீராங்கனைகள் ஏலம் விடப்பட்டிருந்தனர்.
இதில் அனுபவமற்ற இந்திய வீராங்கனை கஷ்வீ கௌதம் இந்திய நாணயப்படி 2 கோடிக்கு ஏலம் போனார். அதேபோன்று அவுஸ்திரேலிய சகலதுறை வீராங்கனை அன்னெபில் சதர்லாண்ட்டை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 2 கோடி ரூபாவுக்கு வாங்கியது.