பதுளை – கொழும்பு வீதியின் உடுவர 6 ஆம் கட்டை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் செல்வதற்கான வீதியை மூடுவதற்கு பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்சன் தெனிபிட்டிய மற்றும் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஹாலிஎல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உடுவர பிரதேசத்தில் பல இடங்களில் நிலவும் அபாயகரமான நிலைமைகளை கருத்திற்கொண்டு உடுவர 6 ஆம் கட்டை பிரதேசத்தின் ஊடாக பஸ்கள் உட்பட கனரக வாகனங்கள் செல்வதற்கான வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதையாக அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹாலி எல விசேட நிருபர்