பாராளுமன்றம் இன்று (10) பி.ப. 12.05 மணியளவில் நாளை (11) 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
போதிய உறுப்பினர்கள் இன்மையால் (கூட்ட நடப்பெண்) இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பி.ப. 4.30 மணி வரை
இடம்பெறவிருந்தது. எனினும், எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நலீன் பண்டாரவினால் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் கூட்டநடப்பெண் தொடர்பில் தலைமை தாங்கும் உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அதற்கமைய, வாக்கழைப்பு மணி 5 நிமிடங்கள் ஒலிக்கப்பட்டதை அடுத்து கூட்டநடப்பெண் இன்மையால் நிலையியற் கட்டளைகளுக்கமைய பாராளுமன்ற நாளை (11) மு.ப. 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக தலைமைவகித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.
அரசியலமைப்பின் 73 ஆம் உறுப்புரையின்படி பாராளுமன்றத்தின் கூட்டநடப்பெண் தலைமைதாங்கும் உறுப்பினர் உட்பட இருபது உறுப்பினர்களாகும். அத்துடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 11 இன் பிரகாரம் எந்நேரத்திலாவது கூட்டநடப்பெண் இல்லை என்பது சபாநாயகரினதோ அல்லது தலைமைதாங்கும் உறுப்பினரதோ கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால் அவர் வாக்கழைப்பு மணி அடிக்கக் கட்டளையிடுவார்.
வாக்கழைப்பு மணி ஐந்து நிமிடங்களின் முடிவில் கூட்டநடப்பெண் காணப்படாதபோது சபாநாயகர் அல்லது தலைமை தாங்கும் உறுப்பினர் வினாவின்றிப் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் வேண்டும்.