பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தேசிய நீரோட்டத்தில் இணைத்து, அவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வெளிவிவகார அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில்
உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றிய போது, “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு பாரிய பொறுப்பை வழங்கியுள்ளார்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களின் முழுமையான நிலைமையை தேசிய நீரோட்டத்தில் இணைத்து, அவர்களின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், மகளிர், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட நலன்புரித் திட்டங்களை ஜனாதிபதி செயலகத்துக்கு கொண்டுவந்து அதன் முழுப் பொறுப்பையும் எனக்கு வழங்கியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தொழில் அமைச்சின் ஆதரவு முக்கியமாகும் என்றார்.