விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருக்கும் ஆப்கானியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்கியிருப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் அற்ற ஆப்கானிய புலம்பெயர்வாளர்களும் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
அந்த வகையில் 3 இலட்சத்து 45 ஆயிரம் ஆப்கானியர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2021 ஓகஸ்ட்டில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து சுமார் 6 இலட்சம் ஆப்கானியர்கள் மூன்றாவது நாடொன்றில் தஞ்சமடைவதை இலக்காகக் கொண்டு பாகிஸ்தானுக்குள் வருகை தந்துள்ளனர். அதேயாண்டு ஆகஸ்ட் முதல் 90 ஆயிரம் ஆப்கானியர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. அவர்களில் பெரும்பகுதியினர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், முன்னாள் ஊழியர்கள் மற்றும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளவர்களை வரவேற்கும் திட்டத்தின் கீழ், 21 ஆயிரத்து 500 ஆப்கானியர்களை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
அகதிகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் தகவல்களின் படி, அமெரிக்க அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்களால் புகலிடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் உள்ளனர்.