மாவட்ட செயலாளர், அதிகாரிகள் கள விஜயம்
அரசாங்கம் நிதியுதவி வழங்கவும் தயார்
அநுராதபுரம் மாவட்டத்தின் திறப்பனை பிராந்திய செயலகப் பிரிவில் செய்கை பண்ணப்பட்டுள்ள Tom EJC மாம்பழ உற்பத்தியை பார்வையிடவும், உற்பத்தியாளர்களை சந்திக்கவும் என கள விஜயமொன்றை அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தலைமையில், மாவட்ட மேலதிக செயலாளர் (காணி) சந்தியா என்.ஜி.அபேசேகர, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சுகத் நயானந்தா, திறப்பனை பிரதேச செயலாளர் ஐ.ஜி. ஏ.ஆர்.எஸ். பண்டார ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
தேசபந்து டாம் எல்லாவல மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த புவான் கார்லோஸ் ஆகியோரின் பல ஆண்டுகால ஆராய்ச்சியின் விளைவாக கண்டு பிடிக்கப்பட்ட மாம்பழ வகைதான் Tom EJC மாம்பழ வகை. இந்த மாம்பழம் வரண்ட கால நிலைக்கு ஏற்றது. இதன் காரணமாக அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் மிகவும் சிறப்பாகவும், தரமான பெறுபேறுகளுடனும் பயிரிடும் வாய்ப்பு உள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பெருமளவிலான விவசாயிகள் இதனை நடுவதற்கு முன் வந்துள்ளனர். இதன் மூலம் பெரும் பொருளாதார அனுகூலத்தைப் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்குத் தேவையான சகல உதவிகளும் வழங்கப்படும் என கள விஜயத்தின் போது அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு TJC மாம்பழத் திட்டத்திற்கான தேசிய விழாவை ஏற்பாடு செய்து அறிமுகப்படுத்தியிருந்தது. இதன்போது இதனை உற்பத்தி செய்ய விரும்பிய 37 விவசாயிகளுக்கு சுமார் 25 மாங்கன்றுகள் வீதம் வழங்கியிருந்தன. அந்த பயிர் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் அறுவடையாக சுமார் 350 மாம்பழங்களை ஒரு விவசாயி பெற்றிருந்தார். மற்றுமொரு விவசாயி முதல் கட்டத்தில் 25 மரங்களை நட்டி முதல் அறுவடையாக 200க்கும் மேற்பட்ட மாம்பழங்களைப் பெற்றிருந்தார் என கள விஜயத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் TJC மாம்பழத் திட்டத்தின் முதல் கட்டத்தில் வெற்றிபெற்ற விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் இதன் உற்பத்தியில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.
திறப்பனை தினகரன் நிருபர்