சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை
குருநாகல் வைத்தியசாலைக்கென தருவிக்கப்பட்டுள்ள சி.ரி ஸ்கேன் இயந்திரத்தை சுங்கத்திலிருந்து விடுவிக்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, சுகாதார அமைச்சரிடம் நேற்று கோரிக்கை விடுத்தார். குருநாகல் வைத்தியசாலையில் சி.ரி ஸ்கேனர் இயந்திரம் பழுதடைந்து நீண்ட காலம் செயலிழந்துள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தி சுகாதார அமைச்சுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினேன். இதையடுத்து சுகாதார அமைச்சு அந்த இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்து இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.இருந்த போதும் இவ்வியந்திரம் சுங்கத்திலிருந்து இதுவரை விடுவிக்கப்படாமலுள்ளது. குருநாகல் வைத்தியசாலைக்கு மிகவும் வறுமை நிலையிலுள்ள விவசாய மக்களே சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இப்போது அங்கு சீ.ரி ஸ்கேனர் இயந்திரம் இல்லாததால், அவர்கள் அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சிலர் அதிக பணத்தை செலவு செய்து சிலாபம் மற்றும் கேகாலை ஆஸ்பத்திரிகளுக்கும் செல்கின்றனர். அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நிதி அமைச்சு இதில் தலையிட்டு சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் சுங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த இயந்திரம் இல்லாததால் நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தினால் பெருமளவு நிதி தொடர்ந்து செலவிட வேண்டி ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்