அரபுக்கல்லூரிகளுக்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை
பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரச்சினை இல்லை. அரபுக் கல்லூரிகளை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே, பதிவு செய்ய முடியுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) நடைபெற்ற சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.
எஸ் தெளபீக், இம்ரான் மஹ்ரூப், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் உரையாற்றும்போது கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன்போது எம்.எஸ். தெளபீக் எம்.பி தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. அதேபோன்று முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் தற்போது ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் அங்கு பணிகள் முறையாக இடம்பெறாதுள்ளன என்றார்.
இதைடுத்து, இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரிவிக்கையில்,மூன்று மதங்களுக்கு தனியான அமைச்சு இருந்து வந்தது. தற்போது பெளத்த சாசன அமைச்சின் கீழ், திணைக்களங்கள் ஊடாகவே ஏனைய மத நடவடிக்கைகள் வழிப்படுத்தப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களத்தை அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கின்ற வகையில் நெறிப்படுத்த வேண்டும் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்