வங்குரோத்திலிருந்து நாட்டை மீட்க இதுவே சந்தர்ப்பம்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை எதிர்வரும் 12இல், கிடைக்கவுள்ளதாகவும் இதுவே நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே சந்தர்ப்பமென்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடன் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட உலகின் பலம் வாய்ந்த நாடுகளை, ஒரே நிலைப்பாட்டுக்குக் கொண்டு வந்து கடன் தவணையை பெற்றுக் கொள்ள முடிந்தமை இலங்கை பெற்றுள்ள பெரும் வெற்றியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல நாடுகளோடும் தனிப்பட்ட ரீதியில் வைத்துள்ள தொடர்புகளை உபயோகித்து மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அமைச்சர், சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச ரீதியில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இலங்கை பாதுகாத்து வரும் பிளவுபடாத கொள்கையை முன்கொண்டு செல்வதாலேயே இச்சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது.
ஜப்பான், சீனா, இந்தியா அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் சிறந்த தொடர்புகளை கட்டியெழுப்பியுள்ளோம்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில், பல்வேறு கருத்துக்களைக் கொண்ட நாடுகளை ஒரே நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது கஷ்டமானதாகும்.
எனினும், இவ்விடயத்தில் மார்ச் மாதமளவில் இந்தியா,சீனா, மற்றும் பெரிஸ்கிளப்புடனான ஒத்துழைப்புக்கள் சாதகமாக அமைந்தன.இதனாலேயே, சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது தவணையை பெற முடிந்தது.
பெரிஸ் கிளப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த நாடுகளுடனான ஜனாதிபதியின் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் முதலாவது கடன் தவணையை பெற்றுக் கொள்வதற்கு அந்நாடுகள் உதவின.
நாட்டிற்கு பெருமளவில் உல்லாசப்பிரயாணிகளை கொண்டு வருவதற்கு எம்மால் முடிந்துள்ளது. அத்துடன் இலங்கையுடன் தொடர்புகளை கொண்டிராத சவூதி எயார்லைன் விமான சேவைகளை தொடரவுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்