மாத்தளை சாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபரும் வரலாற்று ஆசிரியரும் பன்னூல் ஆசிரியருமான ஏ.ஏ.எம். புவாஜி (வயது 82) சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (6) கொழும்பில் காலமானார்.
மாத்தளையை பிறப்பிடமாக கொண்ட இவர், மாத்தளை சாஹிரா கல்லூரியின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியும் ஆசிரியர் கலாசாலையின் போதனா ஆசிரியராகவும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள பல பாடசாலைகளில் அதிபராக சேவையாற்றியதோடு 1995 ஆம் ஆண்டு முதல் 2007 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி விரிவுரையாளராகவும் சேவையாற்றி வந்துள்ளார்.
கல்வி, இலக்கியம், சமயம், மற்றும் சமூக பணிகளுக்காக தன் வாழ்வின் பெரும் பகுதி காலத்தை அர்பணித்த இவர் அரச மற்றும் அரச சார்பற்ற நிருவனங்களிலிருந்து கலாபூஷணம், சாஹித்திய விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.
ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றுள்ள இவர் மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறும் பாரம்பரியமும் எனும் நூலுடன் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டு வைத்த பெருமை இவரைச் சாரும். நான்கு பிள்ளைகளின் தந்தையான அன்னாரின் ஜனாஸா அவரது சொந்த ஊரான மாத்தளைக்கு எடுத்து வரப்பட்டு புதன் இரவு 10 மணியளவில் மாத்தளை கொங்காவல ஜும்ஆ பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
(மாத்தளை சுழற்சி நிருபர் )