முரண்பாடுகளுக்கு வழி வகுக்கவேண்டாம்; அமைச்சர் டிரான்
முரண்பாடுகளுக்கு வழி வகுக்காமல் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு மதிப்பளித்து செயற்படுமாறும், இதுவே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவரும் சட்டத்திற்கு மாறாக முறையற்ற விதத்தில் செயற்பட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்களென சபையில் தெரிவித்த அவர், பிரபாகரனின் பிறந்த தினத்தன்று மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுடனேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுவிப்பது,பிணை வழங்குவது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும். அது தொடர்பில் தாம், தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரபாகரனின் பிறந்த தினத்தை இறந்தவர்களுக்கான நினைவேந்தல் என்ற போர்வையில் அனுஷ்டிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது. எதிர்காலத்தில் இவ்வாறு செயற்பட்டால் கைதுகள் தொடரும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்பி முன்வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் மிக முக்கியமான சட்டமாகும்.தேசிய பாதுகாப்புக்கு முரணான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. அந்த வகையில் முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என தமிழ் சமூகத்துக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற நினேவேந்தல் நிகழ்வன்று 11 பேர் கைது செய்யப்பட்டனர்.மூன்று நீதிமன்றங்கள் நினைவேந்தலுக்கு தடை விதித்திருந்தன. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை. பிரபாகரனின் பிறந்த தினத்தன்று கொடிகளை ஏந்தி சென்றவர்கள் முரண்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளனர். காட்சிப் படங்கள் மூலம் இது தொடர்பாக தெரிய வருகின்றது. இதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
நினைவேந்தல் நிகழ்வில் பிரகாபரனின் உருவத்திலான கேக்,டீ.சேர்ட், புலிக் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அதற்கு எந்த வகையிலும்இடமளிக்க முடியாது.
இன நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் குரல் எழுப்பி வருகின்றபோதும், அவர்களே இவ்வாறான தடை செய்யப்பட்ட விடயங்களுக்கும் இடமளிக்க முற்படுகின்றார்கள். அது தவறு.அவர்கள் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)