மிக பாரதூரமானது, வருத்தம் தெரிவிக்கவேண்டும்
நீதிபதிகள் தொடர்பில் அடிப்படையற்ற பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் நீதி அமைச்சர் என்ற வகையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தமது பொறுப்பாகுமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியரசர் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டை சபையில் முன் வைத்துள்ளார். இது மிகப் பாரதூரமானது. அவர் அதனை திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முன்வைத்த விசேட கூற்றொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டிய எத்தகைய அவசியமும் எனக்குக் கிடையாது. இதற்காக யாராவது என்னை,தூண்டி விட்டிருக்கலாம் என்று அவர் சபையில் குறிப்பிடுகின்றார். அவ்வாறு செயல்படுவதற்கு நான் முன்பள்ளி மாணவரல்ல. அவரது உரையில் நீதியரசரின் பெயரை குறிப்பிடவில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார்.உயர்நீதிமன்ற நீதியரசர்களின் இஸ்லாமிய நீதியரசர் ஒருவரே உள்ளார் என்பதை நான் அவருக்கு குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது உரையில், இஸ்லாமிய நீதியரசர் ஒருவர் உள்ளார். நான் அவரை கண்டதுமில்லை,பேசியதுமில்லை. அவர் முஸ்லிம்களுக்காக வழக்குகளில் ஆஜராகுவதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ரிசாட் பதியுதீன் ராஜபக்ஷக்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். அந்த நீதியரசர் ராஜபக்ஷக்களுக்கு சார்பாகவும் எதிராவும் தீர்ப்பளிக்கவில்லை. அத்துடன் அவர் ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ வழக்கு தொடர்பில் குறிப்பிட்டார்.நாட்டு மக்கள் இந்த வழக்கை நன்கு அறிவார்கள்.
இந்த வழக்கு தீர்ப்பினால் ரிஷாட் பதியுதீனும் அதிக இலாபமடைந்தார். இந்த தீர்ப்பின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திலேதான், ரிஷாட் பதியுதீன் 10 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்தார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)