கல்வி மறுசீமைப்புடன் இது சாத்தியமாகும் – அமைச்சர் சுசில்
பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் அமைக்கப்படுமென ஆரம்பத்திலிருந்து தெரிவிக்கப்பட்டு வந்தாலும் இன்னும் அது, ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அவசரமாக அதனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் பின்னர் கல்வி வலயங்கள், கொத்தணி அலுவலகங்களாக ஏற்படுத்தப்படும்போது பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் ஒன்று ஏற்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஹக்கீமின் கேள்விக்கு உடனடியாக பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் (05) நடைபெற்ற கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அமைச்சர் சுசில் பதிலளித்தார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தனது கேள்வியின்போது,, பொத்துவிலுக்கான கல்வி வலயம் அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.இதனாலேயே பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் தேவைப்படுகிறது. இதனால் அவசரமாக அதனை செய்துதர வேண்டும். பந்துல குணவர்த்தன காலத்திலும்
இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.இதுவும் நடைபெறவில்லை.
அதேநேரம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சில முக்கிய பீடங்கள் அவசியமாக தேவைப்படுகின்றன. அட்டாளைச்சேனையில் உள்ள ஆசிரியர் கல்வி கலாசாலையில் பல கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளன. அந்த கட்டிடங்களை பயன்படுத்தி அங்கு கல்வி பீடத்தை அமைக்கலாம். அதேபோன்று மல்வத்தை பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இருக்கின்ற காணியை பாவித்து அங்கு விவசாய பீடத்தை அமைக்கலாம்.
தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் விருப்பமாக இருப்பது, அங்கு உல்லாச பயணத்துறைக்கான ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.பொதுத்துவில் அறுகம்பை, பாசிக்குடா பிரதேசங்களுக்கும் அங்குள்ள ஹோட்டல்களுக்கும் தேவையான ஊழியர்களை பயிற்றுவிப்பதற்குமான ஒரு பல்கலைக்கழக கற்கை நெறிகளைக்கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு பீடம் அமைக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.