கொழும்பில் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த பார்வையாளர் மூலம் 14 மாத காலப்பகுதிக்குள் 102 கோடியே 59 இலட்சம் (1,025.9 மில்லியன்) ரூபா வருமானத்தை பெற முடிந்துள்ளதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2022 செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் நேற்று முன் தினம் (05) வரையான காலப்பகுதியிலேயே, இந்த வருமானத்தை பெற முடிந்துள்ளது. அக்காலப்பகுதியில் 13,52,324 உள்ளூர் மக்களும், 38,597 வெளிநாட்டவர்களும் இதனைக் காண வந்துள்ளதாகவும் லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் நேற்று (06) காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து, தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க,
“செப்டம்பர் 15, 2022 அன்று தாமரைக்கோபுரத்தை நாங்கள் பொறுப்பேற்றபோது, உணவகத்தைத் திறக்கும் நிலைமையில் இல்லை. அதற்காக நாங்கள் டெண்டர் கோரினாலும், யாரும் முன்வரவில்லை. அதனால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு திட்டத்தைத் தொடர முடிவு செய்தோம். அதன்படி, முகாமைத்துவ நிர்வாக மாதிரிக்கு சென்றோம். அதன்படி சிட்ரஸ் ஹோட்டல் நிறுவனத்தை தெரிவு செய்தோம்;. உணவகத்தின் லாபத்தில் 80 சதவீதம் தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்துக்கும் மீதமுள்ள 20 சதவீதம் சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துக்கும் கிடைக்குமாறு நடவடிக்கை எடுத்தோம். 220 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளோம்.15 செப்டம்பர் 2022 நேற்று முன் தினம் வரை (05) உள்ளூர் 1,352,324 பார்வையாளர்கள் வந்துள்ளனர். 38,597 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்களிடமிருந்து மட்டுமே எமக்கு வருமானம் கிடைத்துள்ளது.