இரண்டாம் உலக யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்த ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் கல்வி ரீதியில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியதாலேயே பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்ததாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையை விட பின்தங்கிய நிலையிலிருந்த நாடுகள் தற்போது முன்னேறியுள்ள நிலையில், எமது நாட்டின் பின்னடைவு தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும் எனவும் சபையில் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரப்படுத்தலில் மேல் மட்டத்தில் காணப்பட வேண்டுமானால், நாட்டின் பல்கலைக்கழக கல்வித் தரத்தை முன்னேற்றுவது தொடர்பில் புதிதாக சிந்திக்க வேண்டும்.பல்கலைக்கழகங்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த வருடத்தில் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கும் யோசனைகள் ஜனாதிபதி முன்வைத்தார்.
அத்துடன் புதிய மருத்துவ பீடங்களை உருவாக்குவது தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
(லோரன்ஸ் செல்வநாயகம்)