பாடசாலைகளில், ஆங்கில மொழி மூலமான கல்வியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொழிநுட்பக் கல்வியை முதலாம் தரத்திலிருந்து கட்டாயமாக்க வேண்டிய அவசியம் தொடர்பில் சபையில் குறிப்பிட்ட அவர், இக்கல்வியை ஆங்கில மொழிலேயே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர், கல்வியமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர்,
நாட்டின் கல்வித்துறையில்
புதிய மாற்றங்களை உள்வாங்கி புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் காணப்படுகிறது. 1950 களிலிருந்து சிங்களம் மட்டும் என்ற பொறிமுறைக்குள் நாம் தொடர்வதால், முன்னேற முடியாதுள்ளது.
குறுகிய சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, சுருங்கிய மனப்பாங்குடன் செயற்பட்டால் உண்மையான சுபீட்சத்தையும் எட்ட முடியாது.
சிங்கள மற்றும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போன்றே, ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கிணங்க நாட்டிலுள்ள 10,126 பாடசாலைகளிலும் ஆங்கில மொழிக் கல்வியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று தற்போது பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரை கற்பிக்கப்படும் தொழிநுட்பக் கல்வியை முதலாம் தரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் ஸ்மாட் பாடசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்