நைஜீரிய இராணுவம் கிளர்ச்சியாளர் இலக்குக்கு பதில் சமய நிகழ்ச்சி ஒன்றின் பொதுமக்கள் ஒன்றுகூடல் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தவறுதலாக நடத்திய தாக்குதலில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தவர்கள் மீதே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி போலா அஹமது டினுபு இது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்த 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய அவசர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
“முதல் குண்டு விழும்போது நான் வீட்டுக்குள் இருந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாம் சம்பவ இடத்திற்கு ஓடினோம் பின்னர் இரண்டாவது குண்டு வீசப்பட்டது” என்று உள்ளூர் குடியிருப்பாளரான இத்ரிஸ் தஹிரு ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் கொள்ளைக்கார ஆயுதக் குழுக்களுடன் அந்நாட்டு இராணுவம் சண்டையிட்டு வருவதோடு ஜிஹாதிக் குழுக்களுடனும் அது போரிட்டு வருகிறது.