இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் விதித்துள்ள தடையை விரைவில் அகற்றுவதாக அந்த கெளன்ஸில் கூறியதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தடையை அகற்றுவதற்காக சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவுக்கு எதிராக உள்ள அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐ.சி.சியிற்கு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிரிக்கெட் சங்கங்கள் மீதான அரசியல் தலையீடுகள் தொடர்பில் தாய் சங்கத்திற்கு முறையிடுவது தவறு என்றும் தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது ஷம்மி சில்வாவை பாதுகாப்பதற்கு அல்லவென்றும் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார். வரவு செலவு திட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பில் நேற்றுமுன்தினம் (04) இடம்பெற்ற விவாதத்தின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் தலையீட்டை காரணம் காட்டி இலங்கை கிரிக்கெட் மீது கடந்த நவம்பர் 10 ஆம் திகதி ஐ.சி.சி தடை விதித்தது. தடை இருந்தபோதும் சர்வதேச போட்டிகளில் ஆட இலங்கைக்கு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.