கல்முனையில் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் 15 வயது சிறுவன் விக்கெட் மற்றும் தும்புத்தடியினால் மிக மோசமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மகளிர் விவகார சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுவன் மீது இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டு கைது செய்யப்பட்டுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் பரிபாலகரான பெண், தொழில் ரீதியாக எந்த பயிற்சிகளையும் பெறாதவர் என்றும் அப்பதவிக்கான எந்த தகுதியும் அவருக்கு இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் தற்போது உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த பெண் முறைப்படி அந்த பதவிக்கு வந்தவரா? அல்லது பின் கதவால் வந்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதைக் கருத்திற்கொண்டு தான்,நன்னடத்தை அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் வேலைத் திட்டம் அமைச்சு மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கல்முனை சம்பவம் தொடர்பில் தமது முழுமையான அவதானத்தை செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், மேற்படி சிறுவன் பெற்றோர்களினால் கைவிடப்பட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சபையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
பராமரிப்பு நிலையம் என்பது சிறுவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், அவர்களுக்கான கல்வி உள்ளிட்ட அனைத்தையும் வழங்கும் இடமாகும். அவ்வாறான ஒரு நிலையத்தில் இவ்வாறான மோசமான சம்பவமொன்று இடம்பெற்றுமை தொடர்பில் நாம் பெரும் கவலையடைகிறோம். சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் அதிகாரி என்பவர் வெறுமனே அதிகாரியாக, ஊழியராக செயல்படுபவர் அல்ல.
லோரன்ஸ் செல்வநாயகம்