பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் இடைநிறுத்தப்பட்டுள்ள சர்வோதயபுரம் பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகளை மீளவும் ஆரம்பித்து வீதியை பயன்பாட்டுக்கு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ் வீதியால் தினமும் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பயணித்து வருகின்றனர். இவ் வீதி பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் முக்கியமான வீதியாக காணப்படுகின்றது.
இவ்வீதி சேதமடைந்துள்ளதால் மழை காலங்களில் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 12 கிலோ மீற்றர் நீளமான வீதி புனரமைக்கும் வேலைகள் கடந்த 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த வீதியானது ஆங்காங்கே சிறுசிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு சரியான திட்டமிடல் இன்மையால் குறைந்தளவிலான அபிவிருத்திப் பணிகள் நிறைவு பெற்று, மீதியாக காணப்படும் வீதியின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் வீதியின் சில பகுதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, கைவிடப்பட்டுள்ள இவ் வீதியின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(ஒலுவில் விசேட நிருபர்)